×

ரூபி மனோகரன் எம்எல்ஏ மீதான நடவடிக்கை நிறுத்திவைப்பு: காங்கிரஸ் விவசாய பிரிவு உண்ணாவிரதம் வாபஸ்

நெல்லை: ரூபி மனோகரன் எம்எல்ஏ மீதான நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து காங்கிரஸ் விவசாய பிரிவு அறிவித்த உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் வெளியிட்ட அறிக்கை: காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்திய மூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் நடந்த விரும்பத்தகாத சம்பவத்தில் நெல்லை மாவட்ட காங்கிரசார் சிலர் தாக்கப்பட்டனர். இந்த சம்பவம், மாநில தலைவர் முன்னிலையில் நடந்தது தான் எங்களைப் போன்ற மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளை கலங்க வைத்தது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும், நடந்த சம்பவத்திற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அகில இந்திய காங்கிரஸ் தலைமையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 30ம் தேதி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் அகிம்சை வழியில் சத்தியமூர்த்தி பவனில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தோம். இதைத் தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் சார்பில் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்தது. அதுவும் சரியாக நடைபெறாமல் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நாங்குநேரி எம்எல்ஏவும், தமிழக காங்கிரஸ் பொருளாளருமான ரூபி மனோகரன் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து நீதி சாய்க்கப்பட்டது. இந்தக் குழு விசாரணை நடத்தக் கூடாது என்றும், டெல்லியில் இருந்து சிறப்புக் குழு வந்து தான் விசாரணை நடத்த வேண்டும் என்றும் ்ரூபி மனோகரன் எம்எல்ஏ மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் நாங்கள் வலியுறுத்தினோம். இதுதொடர்பாக அறிக்கை மூலமும், தொலைபேசி மூலமும் காங்கிரஸ் மேல்மட்ட தலைவர்களை தொடர்பு கொண்டு தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இல்லையென்றால் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்றும் கூறி வந்தோம். இந்த நிலையில் எளிய காங்கிரஸ் தொண்டர்களின் அறிக்கையும் டெல்லி தலைமையை எட்டும் என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாநில பொருளாளர் ரூபி மனோகரன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை நிறுத்தி வைத்தார். இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் வருகிற 30ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடைபெற இருந்த உண்ணாவிரதம் காங்கிரஸ் தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் வேண்டுகோளுக்கு இணங்க ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்….

The post ரூபி மனோகரன் எம்எல்ஏ மீதான நடவடிக்கை நிறுத்திவைப்பு: காங்கிரஸ் விவசாய பிரிவு உண்ணாவிரதம் வாபஸ் appeared first on Dinakaran.

Tags : Ruby Manokaran ,Congress Agriculture Wing ,Nellai ,MLA ,Dinakaran ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நாங்குனேரி எம்எல்ஏ ரூபி மனோகரனிடம் விசாரணை